அருவிகளில் ஆர்பரிக்கும் தண்ணீர் களைகட்டும் குற்றால சீசன்... குவியும் சுற்றுலா பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் சாரல் மழையுடன் ரம்மியமான சீசன் துவங்கும். ஜூன் தொடங்கி ஆகஸ்ட் வரை சீசன் களைகட்டும். இந்த ஆண்டு வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் சற்று தாமதமாக 17 நாட்களுக்கு பிறகு சீசன் துவங்கியது.
ஆரம்ப நாளிலேயே அமர்களமாக தொடங்கிய சீசன் தற்போது களைகட்டியுள்ளது. கடந்த இரு தினங்களாக குற்றாலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.
கொட்டும் தண்ணீர்
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
பழைய குற்றாலத்தில் தண்ணீர்
தென்காசி,செங்கோட்டை,குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை தொடர்ந்து பெய்ததால் பழைய குற்றாலத்திலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
பயணிகள் மகிழ்ச்சி
ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் விழுவதால் குற்றாலத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
குவியும் பயணிகள்
இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சீசன் களை கட்ட தொடங்கியுள்ளதையடுத்து அங்கு வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.