பாபநாசம், மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
நெல்லை: மலைப் பகுதிகளில் மழை குறைந்தும், பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் குறையாத காரணத்தால், பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீடிக்கிறது. குற்றாலம் அருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து கணிசமாக நீர்வரத்து இருந்ததால், அணைகளில் இருந்து உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
பாபநாசம் கல்யாணதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டதால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்தபோதிலும் அருவிகளில் வெள்ளம் குறையவில்லை. செவ்வாய்க்கிழமையும் அருவிகளில் நீர்வரத்து கணிசமாக இருந்தது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.