செம்ம கிளைமேட்.. தண்ணீரின் வேகமும் குறைந்தது.. 23 நாட்களுக்குப் பிறகு ஓகனேக்கலில் குளிக்க அனுமதி!
23 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்: 23 நாட்கள் கழித்து, ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது. கனமழை தீவிரமாக பெய்ததால், கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பின. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இவ்வாறு திறந்துவிடப்பட்டதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 10-ந்தேதி முதல் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த நிலையில் நேற்று முதல் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் பரிசல் இயக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்ததால், மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேற்று ஒகேனக்கல்லில் பரிசலில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
தண்ணீர் வரத்து நேற்றும், இன்றும் குறைந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ளது. அதேபோல பரிசல் இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 23 நாட்களுக்கு பின்னர் ஒகேனக்கல் ஆற்றில் குளிக்க அனுமதி வழங்கியதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.