கோடையில் களைகட்டுது குற்றாலம்-ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து மகிழும் பயணிகள்
Recommended Video
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பெரும் இரைச்சலுடன் ஆக்ரோஷமாக அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்ப சலனத்தால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் நெல்லை மாவட்டம் தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக நேரத்தில் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளதையடுத்து சுற்றுலா பயணிகள் நேற்றே குவியத்தொடங்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக வெயிலின் கொடுமையில் சிக்கி தவித்து, தற்போது மிதமான சாரலும் இதமான காற்றும் வீசுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். அருவியில் கொட்டும் நீரில் பயணிகள் உற்சாகமாக குளிப்பதுடன், செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.
சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கூட்டம் இன்னும் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையினால் அப்பகுதியிலுள்ள கடை வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்