கொட்டும் அருவி... விடுமுறை தினம்... குற்றாலத்தில் கும்மாளம் போடும் சுற்றுலாப் பயணிகள்!
நெல்லை: விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளம் ஏற்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க 8ஆம் தேதி காலைமுதல் 9ஆம் தேதி காலை வரை தடை விதிக்கபட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்தோடு அருவிக்கரையில் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.
ஆனால், 9ஆம் தேதி தண்ணீர் வரத்து கொஞ்சம் குறைந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல்துறையினர் அனுமதியளித்தனர்.இதனைத் தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை மற்றும் சனி ,ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குற்றாலம் மெயின் அருவிகளில் குளித்தும் குண்டாறு நீர்தேக்கத்தில் படகு பயணம் மேற்கொண்டும் வருகின்றனர்.
அருவிகளில் ஆர்ப்பாரித்து கொட்டும் நீரில் ஆனந்தமாய் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தவண்ணம் உள்ளனர்.