குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப் பெருக்கு- சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
குற்றாலம்: தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தின் முதன்மை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிகளின் நகரமான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சீசன் களைகட்டி இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியதால் சீசன் மந்தமாக காணப்பட்டது.
சாரல் மழை:
அவ்வப்போது பெய்த சாரல் மழையால் அருவிகளில் குறைவான தண்ணீரே விழுந்தது. நீர்வரத்தும் அதிகமாக இல்லை.
பயணிகள் ஏமாற்றம்:
இதனால் நாடெங்கிலும் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் போதிய தண்ணீர் கொட்டததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதிகரிக்கும் மழை:
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்வதால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து கொட்டத்தொடங்கியுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கினர்.
வெள்ளப் பெருக்கு:
நேற்று இரவுமுதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதால் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
அருவியில் குளிக்கத் தடை:
இதன் காரணமாக இன்று காலை 10 மணிக்கு மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மிதமான தண்ணீர் வரத்து:
ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் மிதமான தண்ணீர் வரத்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாய் குளித்து செல்கின்றனர்.