கொளுத்தும் கோடை வெயில்: அகஸ்தியர் அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: கோடை வெயிலிலும் தண்ணீர் குறையாமல் கொட்டுவதால் பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதயில் பல அருவிகள் உள்ளன. குற்றாலம் மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் சீசன் காலத்தில் மட்டுமே தண்ணீர் விழும். களக்காடு மலைப்பகுதியில் உள்ள அருவிகளிலும் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும். ஆனால் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது கோடை வெயில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெளுத்து வருகிறது. இதில் சீசன் இல்லாததால் குற்றால அருவிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அருவிக்கு படையெடுத்து வருகின்றனர். விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியபடி இருந்தது.
அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் காலையிலேயே உணவு சமைத்து கொண்டு வந்து ஆனந்தமாக குளித்து விட்டு சாப்பிட்டு விட்டு நன்றாக ஓய்வெடுத்து விட்டு சென்றனர். பலர் வெகு தொலைவில் இருந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்பகுதியல் அடிப்படை வசதிகள் இல்லாததால் பலர் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இதனால் குடிநீர், சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.