குற்றாலத்தில் திமுதிமுவென கொட்டும் தண்ணீர்.. ஆர்ப்பரிக்கும் அருவிகள்.. மக்கள் கூட்டம் செம!
Recommended Video
தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவியில் நீர்வரத்து அதிகரித்து கொட்டி வருகின்றது.
ஆர்ப்பரித்து கொட்டிவரும் அருவிநீரில் குளிக்க வரும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது விடுமுறை தினங்கள் என்பதால் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகமாக இருந்தாலும் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவிகளில் ஆண்களையும், பெண்களையும் நீண்டவரிசையில் நின்று குழு குழுவாக குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண்கள் அதிகளவில் நகையணிந்து குளிக்க வருவதால் அருவியில் குளிக்கும் போது திருடர்கள் பயம் காரணமாக இந்த முறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் ஐந்தருவி சாலையிலுள்ள வெண்ணமடை குளத்தில் உள்ள படகுக் குழாமிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகின்றது.
மொத்தத்தில் சீசன் கடந்த மாதங்களில் கண்ணாமூச்சி காட்டினாலும் தற்போது களைகட்டியுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து நெருக்கடி உருவாகியுள்ளது. போதியளவு இரண்டு அருவிகளிலும் போலீசார் பாதுகாப்பு குறைவாகவே இருக்கிறது. இதில் உற்சாக பானம் அருந்தி வரும் சுற்றுலாப்பயணிகளின் தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது.
குற்றாலத்திற்கு குளிக்க வரும் சுற்றுலாப்பயணிகள் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியான செங்கோட்டை அருகில் உள்ள குண்டாறு நீர்த்தேக்கத்திற்கு திரண்டு செல்கின்றனர். நீர்வரத்தின் ஆதாரமாக விளங்கும் இந்த மலைப்பகுதியில் உள்ள நெய்யருவி என சொல்லப்படும் அருவியிலும், வனப்பகுதியில் இருந்து பல்வேறு பாதைகளை கடந்து வரும் காட்டாற்றின் ஓடைகள் அருவியாய் பல்வேறு பகுதிகளில் கொட்டிவருவதிலும் குளிப்பதற்காக இந்தபகுதிக்கு திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளும் 3 மலைகளுக்கு நடுவே நிரம்பிவழியும் குண்டாறு நிர்தேக்கத்தின் அழகை ரசித்தவாறு அங்குள்ள வனங்களில் நடந்து கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பதை போல இந்த மலைப்பாதையில் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை எழில் கொஞ்சும் குண்டாறு நோக்கி விரும்பி படையெடுத்து இங்குள்ள வாகனங்களில் கரடுமுரடான பாதைகளில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு குளிக்க திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
பலத்த மழை காரணமாக உருவாகியுள்ள காட்டாற்று வெள்ளம் உருவாகி மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்பகுதிகளிலுள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நீர் அனைத்தும் இங்குள்ள குளங்கள், கண்மாய்களில் தேக்கிவைக்கபட்டு விவசாயப்பணிகளை விவசாயிகள் தொடர்வதற்கு வாய்ப்பாக உள்ளது.
கர்நாடகாவில் தொடரும் மழை.. காவிரியில் பெரும் வெள்ளம்.. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
தமிழக அரசு நெல்லை மாவட்டத்திலுள்ள 150 குளங்களை தூர்வாரி நிலத்தடி நீரை சேமிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இலஞ்சி-ஐந்தருவி சாலையிலுள்ள ஒரு குளத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து முடிந்த பின்னர் சில பகுதிகளை ஒப்பந்தம் எடுத்தவர்கள் சீராக பணிகளை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டதால் தற்போது பெய்த மழையில் இந்த குளம் நிரம்பியது.
நீர்வரத்தும் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. இதன்காரணமாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டவர்கள் சீரக பணி செய்யாததால் குளத்தின் கரையில் சிறிய உடைப்பு உருவாகி குளத்திற்கு வரும் நீர் வேகமாக வெளியேறி வருகின்றது.அதிகாரிகளுக்கு தகவல் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இன்னும் வந்து சீரமைக்காமல் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.