ஜில்லுன்னு கொட்டுது தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. மெயின் அருவி, ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்!
குற்றாலம்: குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழக கேரளா எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.
இக்காலங்களில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த மக்கள் குவிவார்கள். இந்த சீசன் நாட்களில் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான செங்கோட்டை, புளியரை, குண்டாறு, மேக்கரை, குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இன்று காலை அருவிகளில் வெள்ளம் வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அனுமதியளிக்கப்பட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் எராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.