4 நாட்கள் தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து மாற்றம்
தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலாபயணிகள் குவிந்து வருகின்றனர்.
ஊட்டி: மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகையால் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் இதமான காலச்சூழலை கண்டு ரசிக்க லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகை வந்துசெல்வர்.
இந்த ஆண்டிற்கான கோடை சீசன் தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி என பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வரத் தொடங்கி உள்ளனர். உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
உதகையில் வெள்ளிக்கிழமை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் சுமார் 15,000 பேரும், ரோஜா பூங்காவுக்கு சுமார் 5,000 பேரும் வருகை தந்துள்ளனர். வியாழக்கிழமை தாவரவியில் பூங்காவுக்கு 12,250 பேரும், ரோஜா பூங்காவுகுகு 3500 பேரும் வந்திருந்தனர்.
இன்றும், நாளையும் கூட்டத்தின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக உதகை-மேட்டுப்பாளையம் மலைப்பகுதியில் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.