ஏற்காடு போகப் போறீங்களா?.. ப்ப்ப்ப்பா பயங்கரமா மழை பெய்யுதாம்!
ஏற்காடு: மலைவாசஸ்தலமான ஏற்காட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயங்கரமாக குளிர்கிறதாம். மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனராம்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது. இதையடுத்து பகல் 12.15 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது மழை கொட்டிக் கொண்டே இருந்தது. விடிய விடிய மழை பெய்து கொண்டிருந்தது.
இன்று காலையிலும் இந்த சாரல் மழை நீடித்தது. தற்போது கோடை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.
ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் அவர்களால் வெளியே சென்று ஏற்காட்டின் இயற்கை அழகை ரசிக்க முடியாமல் போனது. அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் ஓட்டலில் அறைக்குள்ளேயே குடும்பத்துடன் முடங்கினார்கள். கார் மற்றும் பஸ்களில் வந்த சுற்றுலா பயணிகள் எங்கும் செல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தொடர் மழையால் ஏற்காட்டில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் வெளியில் வந்தாலே நடுங்கும் நிலை உள்ளதாம். மழையால் பல இடங்கள் வெறிச்சோடிக் கிடக்கிறதாம். மழையை காரணம் காட்டி ஒரு சில தனியார் பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு இயக்காததால் நேற்று மாலை ஒரு தனியார் பேருந்து பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் சமாதானம் பேசி பேருந்தை விடுவித்தனர்.
ஏற்காட்டில் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை தொடர்ந்து மின்சாரம் தடைப்படுகிறது. இந்த தடையினால் ஏற்காட்டில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் உணவு தயாரிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குறித்த நேரத்தில் உணவு கிடைப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்காடு மின்வாரியத்தில் போதிய அளவில் ஊழியர்கள் இருந்தும், மழையின் காரணமாக மலை பாதையில் ஏற்படும் தொடர் மின்தடையை அவர்களால் விரைந்து சரிசெய்ய முடியாமல் போகிறது.
தோட்ட வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் மழையின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இந்த மழையின் காரணமாக ஏற்காட்டில் குடிதண்ணீர் தட்டுபாடு நீங்கியது. இதே போல் மேலும் தொடர்ந்து மழை பெய்து வந்தால் காபி பயிர் சாகுபடி செய்யப்படுவது பாதிக்கப்படலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.