ஒகனேக்கலில் ஓஹோன்னு கூட்டம்.. குளிக்கத்தான்.. 2 மாத தடை நீங்கியதால் உற்சாகம்!
86 நாட்களுக்கு பிறகு பொதுமக்கள் குளிக்க அருவியில் அனுமதி வழங்கப்பட்டது.
தருமபுரி: 86 நாட்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து கூட்டம் நிரம்பி வருகிறது.
அனுமதி மறுப்பு
கனமழை, வெள்ளம், கடும் காற்று என இரண்டு மாதங்களாகவே இயற்கை சீற்றம் தமிழகத்தில் காணப்பட்டு வந்தது. இதனால் முக்கிய அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் தடை
கர்நாடக மாநில மழை காரணமாகவும் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் வெள்ளம் காரணமாகவும் நீண்ட நாள்கள் தடை போடப்பட்டது. ஏனென்றால் இங்கு பெருக்கெடுத்த வெள்ளம் பாறைகளை அனைத்தையும் மூழ்கி ஓடிக் கொண்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் தவித்தனர்.
86 நாட்கள்
பிறகு இயல்புநிலை மெல்ல மெல்ல திரும்ப ஆரம்பித்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. இரண்டு வாரங்கள் இந்த பராமரிப்பு முடிந்த பிறகு தற்போது அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 86 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி என்பதால் ஆர்வத்துடன் ஏராளமானோர் வந்திருந்தனர். மேலும் காலாண்டு விடுமுறையில் சனி-ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் தலை அதிகமாகவே காணப்பட்டது.
களை கட்டும் அருவி
சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தார்கள். இது மட்டும் அல்லாமல் தொங்கு பாலமும் திறக்கப்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துவிட்டதால், அதிலும் நின்று கொண்டு மக்கள் ரசித்தவாறே சென்றனர். பரிசில் இயக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அருவியில் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு விட்டதால், ஒகனேக்கல் களை கட்டி வருகிறது.