நெருங்கும் தீபாவளி... ஆம்னி பேருந்துகளில் வசூல் வேட்டை ஆரம்பம்!
நவம்பர் 2 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னையில் இருக்கும் வெளியூர்க்காரர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். தீபாவளியை காரணமாக வைத்து, இவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கிறது தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள்.
வழக்கமாக வசூலிக்கும் தொகையுடன் ரூ.500 முதல் ரூ.800 வரை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் அதிகமாக வசூலிக்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 30ஆம் தேதி முதல் நவம்பர் 4 ஆம் தேதி வரை பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளவர்களிடம் இந்த கூடுதல் கட்டணத்தை வசூலித்துள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து இணையதளத்திலும் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சாதாரண நாட்களில், சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.670 வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை வசூலிக்கின்றனர்.
இதேபோன்று, சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏ.சி. பேருந்துகளில் கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.780ஐ, ரூ.1,500 முதல் ரூ.1,700 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், சொந்த ஊருக்கு குடும்பத்துடன் செல்பவர்கள் குறைந்தது 6 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஆம்னி பேருந்துகளுக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
''ஆண்டு தோறும் பண்டிகைக் காலங்களைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடைபெறுகிறது. இதைத் தடுக்க அதிகாரிகள் இந்த ஆண்டாவது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?'' என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.