சீர்காழி இரட்டை கொலை: திருவாரூர் முருகனின் கூட்டாளி கைது.. பொம்மை துப்பாக்கி பயன்படுத்தியது அம்பலம்
சீர்காழி: சீர்காழி இரட்டை கொலையில் கொள்ளையர்கள் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்பதும் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.
Recommended Video
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (50). இவரது வீட்டுக்கு வந்த வடமாநில கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து கதவை பூட்டிவிட்டனர். அப்போது கூச்சலிட்ட தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகியோரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டனர்.
இந்த கைகலப்பில் தன்ராஜுக்கும் அவரது மருமகள் நிக்கிலுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டிலுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த 16 கிலோ நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்த சிசிடிவி ஹார்டுடிஸ்கையும் திருடி சென்றுவிட்டனர். மேலும் தன்ராஜின் காரையும் ஓட்டிச் சென்றுள்ளனர்.
காரில் ஜிபிஎஸ்
அதில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை அறிந்து இவர்கள் காரை எருக்கூரில் விட்டுவிட்டு வயல்வெளி பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இவர்களிடம் போய் விசாரித்த போது ஹிந்தியில் பேசினர். மேலும் முன்னுக்குப் பின் முரணாகவே பேசினர். இதனால் சந்தேகமடைந்த மக்கள் இவர்களை பிடித்து வைத்துக் கொண்டு போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.
காவல் நிலையம்
இதில் 3 பேரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயற்சித்தனர். அப்போது மணிபால் சிங் என்பவர் தப்பி ஓட முயற்சித்ததால் அவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மணீஷ், ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் கொள்ளையாளிகள் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என தெரியவந்துள்ளது.
முருகன் கூட்டாளி
இருவர் அளித்த தகவலின் பேரில் மேலும் கும்பகோணத்தில் பதுங்கியிருந்த கருணாராமை போலீஸார் மடக்கி பிடித்தனர். இந்த திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே கருணாராம்தான் என்பதும் அவர் பிரபல கொள்ளையரான திருவாரூர் முருகனின் கூட்டாளி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளைக்காக ஆன்லைனில் பொம்மை துப்பாக்கியை ஆர்டர் செய்ததும் தெரியவந்தது.
லலிதா ஜுவல்லர்ஸ்
இதையடுத்து பிடிப்பட்ட 3 பேரிடமும் இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல கொள்ளையன் முருகன் கடந்த ஆண்டு திருச்சி லலிதா ஜுவல்லர்ஸில் கை வரிசையை காட்டியதும் போலீஸ் காவலில் இருந்த அவர் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.