மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்தில் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க கோரி த.பெ.தி.க போராட்டம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் : மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்தில் விஜயேந்திரர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர். தமிழ்த்தாயை அவமதித்த விஜயேந்திரரை கண்டித்து கோவையில் அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீத பாடலுக்கு எழுந்த நின்ற விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ் மொழியை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்ட விஜயேந்திரர் மீது காவல் நிலையங்களில் புகார்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.
விஜயேந்திரர் தமிழ்த்தாயை அவமதித்ததை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்த்தாயை அவமதித்த விஜயேந்திரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலைப் பாடிய மனோன்மணியம் சுந்தரனார் நினைவிடத்திற்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விஜயேந்திரருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.