நீட் தேர்வில் விலக்கில்லை.. எதுக்கு ராம்நாத்துக்கு ஆதரவு.. அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டது தபெதிக
நீட் தேர்வில் விலக்கு அளிக்காத பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஆதரவளிப்பதைக் கண்டித்து அதிமுக தலைமை அலுவலகத்தை இன்று தபெதிக முற்றுயிட்டு போராட்டம் நடத்தியது.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்களிக்கக் கூடாது என்று கோரி அதிமுக தலைமை அலுவலகத்தை இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிகத்தில் ஏழை மாணவர்களையும், கிராமப்புற மாணவர்களையும் மருத்துவக் கல்லூரிக்குள் நுழையவிடாமல் தடுக்கும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது. ஆனால் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் மோடி அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
இதை எல்லாம் தாண்டி நீட் தேர்வு நடந்து முடிந்த விட்டநிலையில், தமிழக அரசின் பாடத்திட்டத்தின் படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியதையும் சென்னை உயர்நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது. தமிழக மாணவர்கள் இவ்வளவு மோசமாக வஞ்சிக்கப்படும் நிலையில் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துவை அதிமுக ஆதரித்திருப்பது தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதிமுக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், ராம்நாத் கோவிந்துவிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்றும் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வழக்கறிஞர் துரைசாமியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் ராயப்பேட்டை பகுதியில் போலீசார் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.