பிளாட்பாரத்தில் நிற்கும் தா.பா., ஜி.ராமகிருஷ்ணன்.. டி.ஆர்.பாலு நக்கல்
புதுக்கோட்டை: நானே டிரைவர், எங்கள் ரயில் செங்கோட்டை நோக்கி புறப்பட்டு விட்டது என்று முதல்வர் ஜெயலலிதா சொல்கிறார். உண்மை தான் ஜெயலலிதா ஓட்டும் ரயில் டெல்லி செங்கோட்டை நோக்கி போகவில்லை. தென்காசி அருகில் உள்ள செங்கோட்டை நோக்கி போகிறது. போகிற போக்கில் தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன் ரெண்டு பேரையும் பிளாட்பாரத்தில் விட்டுட்டு போறார். பாவம் ரெண்டு பேரும் போற வழி தெரியாம நிக்கிறாங்க என்று பேசியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு.
புதுக்கோட்டையில் நடந்த திமுக பொதுக்குழு தீர்மான விளக்கக் கூட்டத்தில் அவர் பேசுகையில், பால் குடித்து விஷம் கக்கும் நல்லபாம்புகள் இல்லை. பசும் புல் தின்று பால் கொடுக்கும் பசுக்கள் நாங்கள். செம்மொழியை காகிதம் வைத்து மறைத்தார் ஜெயலலிதா. ஆனால் இன்று செம்மொழி, சிலம்பு எக்ஸ்பிரஸ்கள் ஓடுகிறது. அதை தடுக்க முடியாது.
தி.மு.க இயக்கம் ஆறு போன்றது. முதல் 600 கிளைகளுடன் தொடங்கி இன்று 1.5 லட்சம் கிளைகளுடன் ஓடிப் பாய்கிறது.
நானும் விவசாயி தான். தினமும் மண்வெட்டியால் வெட்டிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்த விவசாயத்தை கெடுத்தது ஜெயலலிதாதான். மின்வெட்டை ஏற்படுத்தி விளை நிலங்களை பிளாட் போட வைத்தவர் ஜெயலலிதாதான். மின் கட்டணத்தை 6 சதவீதம் உயர்த்தியும் மின்சாரத்தை சரியாக கொடுக்க முடியவில்லை இந்த அரசால். தி.மு.க கொண்டு வந்த மின்திட்டங்களை செயல்படுத்தினாலே மின்வெட்டு பிரச்சனை இருக்காது.
கோமாரி நோயை கொண்டு வந்தது ஜெயலலிதாதான். விலையில்லா மாடுகள் கொடுக்கிறேன் என்று தமிழக மக்களை மகிழச் செய்ய ஆந்திரா சென்றவர் அங்கும் விலையில்லா மாடு கொடுங்கள் என்று சொல்லி அங்கு விலையில்லா மாடு தானே வேண்டும் என்று நோயால் பாதிக்கப்பட்டு கிடந்த மாடுகளை ஓட்டிவிட்டு விட்டார்கள். அதனால் இன்று நம் பகுதியில் இல்லாத கோமாரி நோய் பரவியுள்ளது.
இலங்கைக்கு ராணுவ பயிற்சி கொடுக்க கூடாது என்று தொடக்கத்தில் இருந்து சொல்வது தி.மு.க தான். சீனா, இலங்கை, பாகிஸ்தான் எப்போதும் நம் எதிரி நாடுகள்தான். அதனால் தான் சேது திட்டத்தை கொண்டு வந்து இலங்கை செல்லாமல் கப்பல் போக திட்டம் வகுத்து பணிகள் முடியும் நிலையில் 24 கி.மீ. மட்டும் பாக்கி இருக்கும் நிலையில் ராமர் பாலம் என்று சொல்லி தடுக்கிறார்கள். மீண்டும் தி.மு.க தயவில் மத்தியில் ஆட்சி வரும் அப்போது சேதுகால்வாய் திட்டம் நடைபெரும்.
தி.மு.க காங்கிரஸ் கூட்டனி இல்லை என்ற போது, கனிமொழி எம்.பி பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றார் ஞானதேசிகன். அப்படின்னா எங்க தயவில் எம்.எல்.ஏ ஆன காங்கிரஸ்காரர்கள் ராஜினாமா செய்தார்களா? ஏன் செய்யவில்லை.
ரகுபதி பேசும் போது சொன்னார்.. நானே டிரைவர் எங்கள் ரயில் செங்கோட்டை நோக்கி புறப்பட்டு விட்டது என்று ஜெயலலிதா சொல்கிறார் என்று. உண்மை தான் ஜெயலலிதா ஓட்டும் ரயில் டெல்லி செங்கோட்டை நோக்கி போகவில்லை. தென்காசி அருகில் உள்ள செங்கோட்டை நோக்கி போகிறது. போகிற போக்கில் தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன் ரெண்டு பேரையும் பிளாட்பாரத்தில் விட்டுட்டு போறார். பாவம் ரெண்டு பேரும் போற வழி தெரியாம நிக்கிறாங்க என்றார் அவர்.