ட்ராக்வியூ ஆப் என்றால் என்ன? காமக்கொடூரர்களிடமிருந்து உங்கள் பர்சனல் வாழ்க்கையை பாதுகாப்பது எப்படி?
Recommended Video
சென்னை: குடும்ப பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு செல்போன் ஆப், குடும்பத்தையே கெடுத்துள்ளது, தமிழகத்தில். தொழில்நுட்பங்களை எப்படி நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும், கிரிமினல்கள் எப்படி அதை பயன்படுத்துகிறார்கள் என்ற தெளிவு வேண்டும்.
ராமாநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவன் தினேஷ் குமார். இவர் செல்போன் ஆப் ஒன்றை பயன்படுத்தி மோசமான செயல்களை அரங்கேற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது. உடன் பிறந்த தங்கை உட்பட பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை இந்த ஆப் மூலம் இவன் பெற்று தனது சுய லாபத்திற்கு பயன்படுத்தியுள்ளான்.
trackview என்ற ஆப் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செல்போன் செயலி பலவகைகளிலும் குடும்பத்தாரின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பதற்காக வடிவமைக்கப்பட்டது ஆனால் அதுவே பாதுகாப்புக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த சம்பவத்தில்.
பாதுகாப்பு
இப்போதெல்லாம் ஸ்மார்ட் செல்போன் இல்லாத நபர்களே கிடையாது. வீட்டில் இருக்கும் பெண்கள், வெளியே செல்லும் சிறுவர் சிறுமிகள் என அனைவரிடமும் செல்போன் இருப்பது கட்டாயம் ஆகி விட்டது. இந்த காலகட்டத்தில் இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது குடும்பத் தலைவர்களின் பொறுப்பு.
இடத்தை அறியலாம்
தனியாக வெளியே செல்லும் குழந்தைகள், பெண்கள் எங்கே உள்ளார்கள், அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்களா என்பதை அறிந்துகொள்ள இந்த செயலியில் லொகேஷன் கண்டுபிடிக்கும் வசதி உள்ளது. இவர்கள் எங்கே உள்ளார்கள் என்பதை இருந்த இடத்திலிருந்தே மொபைல் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
குழந்தைகள் பாதுகாப்பு
மேலும் சிறுவர் சிறுமிகள் தவறான பழக்கவழக்கங்களுக்கு உள்ளாகி விடக்கூடாது என்பதற்காக அவர்களின் செல்போன்களில் என்ன உள்ளது என்பதை இருந்த இடத்திலேயே கண்காணித்துக் கொள்ள முடியும். அவர்களது வீடியோ, போட்டோ உள்ளிட்டவற்றை மற்றொரு போனில் பார்க்கும் வசதி இந்த செயலியில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள், விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆகிய அனைத்து வகை இயங்கு தளங்களிலும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
எப்படி செயல்படுகிறது இந்த ஆப்?
குடும்ப தலைவர் தனது செல்போனிலும், குடும்ப உறுப்பினரின் செல்போனிலும் tackview ஆப்பை தரவிரக்கம் செய்து கொள்ள வேண்டும். தனது செல்போனில் ஒரு கூகுள் அக்கவுண்ட்டை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அதே அக்கவுண்ட்டை பிறருடைய செல்போனிலும் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர், போன்களின் அனைத்து தகவல்களும் அந்த கூகுள் அக்கவுண்ட்டில் சேமிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இதை வைத்து, குடும்ப தலைவர் அனைத்தையும், பார்த்துக்கொள்ள முடியும். இந்த ட்ராக்வியூ என்பது ஒரு உதாரணம் மட்டுமே. இதேபோல பல உளவு ஆப்கள் உள்ளன.
தவிர்ப்பது எப்படி
பெண்களோ, ஆண்களோ தங்களது செல்போன்களில் என்னென்ன ஆப் உள்ளது என்பதை அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியாக, தேவையற்ற ஆப் என்று எதையாவது பார்த்தால் உடனே அதை ரீ இன்ஸ்ட்டால் செய்யுங்கள். முடிந்தால் ஃபேக்டரி ரீசெட் செய்துவிடலாம். யாரை நம்பியும் செல்போனை கொடுத்து விடாதீர்கள். அல்லது செல்போன்களில் எந்த அந்தரங்கத்தையும் பாதுகாக்காதீர்கள்.
நல்லதை மட்டும் எடுப்போமே
இப்படியாக குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு செயலியை அவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படுத்தியுள்ளார் தினேஷ். எந்த ஒரு விஷயத்திலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். கத்தியை வைத்து ஆபரேஷன் செய்யலாம், கொள்ளையும் கூட அடிக்கலாம். அதுபோலத்தான் நவீன கண்டுபிடிப்புகள் புதிதாக வரும்போது அதன் இரு பக்க விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இதுபோன்ற மோசமான விஷயங்கள் நவீன கண்டுபிடிப்புகளின் பக்கவிளைவுகளாக வருகின்றன என்பதை சாமானியர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் தங்களை யாராவது உளவு பார்க்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள அவர்களுக்கு இது உதவும.