கணவரை அப்பா என்று சொல்லி... தேனொழுகப் பேசிய சுமதி.. !
சென்னை: சென்னை அருகே தேனொழுகப் பேசிய பெண்ணின் பேச்சில் மயங்கிய சிமென்ட் வியாபாரி அவர் கேட்டபோதெல்லாம் சிமென்ட் மூடைகளையும், லட்சக்கணக்கில் பணத்தையும் கொடுத்து ஏமாந்துள்ளார்.
அந்தப் பெண் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரது தம்பி, கணவர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். மிக நூதனமாக நடந்த மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்களிடம் மட்டும் கறாராக நடந்து கொண்டு பெண்களிடம் ஜொள்ளு விட்டுப் பேசும் நபர்களுக்கு காலேஷா ஒரு பாடம் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
பனையூர் காலேஷா
சென்னை அருகே உள்ளது பனையூர். இங்கு சிமென்ட், ஜல்லி, செங்கல் உள்ளிட்டவற்றை விற்கும் ஹார்ட்வேர் கடை வைத்துள்ளார் காலேஷா. இவரிடம் ஆனந்த் என்ற டிரைவர் சில மாதங்களுக்கு முன்பு 30 மூட்டை சிமென்ட் வாங்கினார். அதில் ஒரு பாதி தொகையை பிறகு தருவதாக கூறியுள்ளார்.
சிமென்ட் மூட்டையை வைத்து
அடுத்து சில நாட்கள் கழித்து வந்து மேலும் 600 மூடை சிமென்ட் தேவைப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் பாக்கியைத் தராமல் புதிதாக தர முடியாது என்று காலேஷா கூறியுள்ளார. இதையடுத்து போனைப் போட்டு ராஜேந்திரன் என்பவரிடம் கொடுத்து இவர் என் முதலாளி, இவரிடம் பேசுங்கள் என்று கூறியுள்ளார். காலேஷாவும் பேசினார். ராஜேந்திரன், எங்களது அடுக்கு மாடிக் குடியிருப்புக்குத்தான் கேட்கிறோம். கொடுத்தனுப்புங்கள், பணத்தைக் கொடுத்து விடுகிறேன் என்று ராஜேந்திரன் கூறியுள்ளார். இதையடுத்து சிமென்ட் கொடுத்துள்ளார் காலேஷா.
நான் அருணா பேசுகிறேன்
இந்த நிலையில் சில நாட்கள் சென்ற பின்னர் காலேஷாவுக்கு ஒரு போன் வந்தது. அதில் ஒரு பெண் பேசினார். நைச்சியமாக, வழிய வழிய அவர் பேசியுள்ளார். நான் அருணா பேசுகிறேன். என்னுடைய அப்பாதான் ராஜேந்திரன். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். 2 லட்சம் கொடுங்க. அப்பா வந்ததும் அதையும், பழைய பாக்கியையும் கொடுத்து விடுகிறேன் என்று பேசியுள்ளார் அப்பெண்.
கேட்டபோதெல்லாம்
அருணாவின் பேச்சைக் கேட்டு இறங்கி வந்தார் காலேஷா. உடனே தர்றேன் என்று கூறி பணத்தைக் கொடுத்து அனுப்பினார். அதன் பிறகும் அருணா அடிக்கடி பேசி பேசி காலேஷாவிடம் தேனொழுகப் பேசுவார், பணம் கேட்பார், இவரும் ஓடிப் போய் பணத்தை வங்கியில் போட்டு விட்டு வருவார். இப்படியாக ரூ. 25 லட்சம் வரை கறந்து விட்டார் அப்பெண்.
வயிற்றில் கட்டி.. வந்தது சந்தேகம்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு போனைப் போட்ட அருணா, எனக்கு வயிற்றில் கட்டி வந்துள்ளது. ஈரோடு மருத்துவனையில் சேர்ந்துள்ளேன். பீஸ் கேட்ட ரூ. 1.60 லட்சம் வேண்டும். உடனே போட்டு விடுறீங்களா என்று கொஞ்சலாக கேட்க, எப்போதும் வராத சந்தேகம், நெற்றில் பொட்டில் பட்டென அடித்தபடி வந்ததது காலேஷாவுக்கு. உடனே அந்த மருத்துவமனையின் போன் நம்பரைத் தேடி போட்டுக் கேட்டபோது அப்படி யாரும் இங்கு அட்மிட் ஆகவில்லை என்று தகவல் கிடைத்தது.
அப்படியே ஷாக் ஆயிட்டாரு!
இதனால் அதிர்ச்சி அடைந்த காலேஷாவுக்கு அப்போதுதான் அறிவே வந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனே போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதலில் டிரைவர் ஆனந்த்தைத் தூக்கினர். அவரிடம் விசாரித்தபோது உண்மைகள் வெளியே வந்தது.
அது அருணா இல்லை.. சுமதி
அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் அருணா இல்லையாம். சுமதி என்று ஆனந்த் கூறியுள்ளார். மேலும் அவர் தனது அக்கா என்றும் அவர் கூறியுள்ளார். இருவரும் போலி நாடகமாடியுள்ளனர்.
அப்பா இல்லை.. புருஷன்!
அதை விட கொடுமை ராஜேந்திரனின் உண்மையான பெயர் ரமேஷ். அவர் சுமதிக்குத் தாலி கட்டிய கணவராம், அப்பா இல்லையாம். அதாவது ஒரு குடும்பமாக மோசடி செய்து பணம் பறிப்பது இவர்களின் வாடிக்கை என்று போலீஸார் கூறியுள்ளனர். தற்போது சுமதி தலைமறைவாகி விட்டார் மற்ற இருவரும் சிக்கியுள்ளனர். இவர்களுக்கு உதவியாக இருந்ததாக குரு என்பவரும் சிக்கியுள்ளனர்.
கள்ளக்காதலி வேறு
இதில் ரமேஷுக்கு கல்லூரி மாணவி ஒருவர் கள்ளக்காதலியாக உள்ளாராம். அவருக்கு சொகுசுக் கார் வேறு வாங்கிக் கொடுத்துள்ளாராம் ரமேஷ். இது சுமதிக்குத் தெரியுமா என்று தெரியவில்லை!