ஜிஎஸ்டியை எதிர்த்து ஆகஸ்ட் 8ல் தமிழகத்தில் கடையடைப்பு.. விக்கிரமராஜா அறிவிப்பு
ஜிஎஸ்டியை எதிர்த்து ஆகஸ்ட் 8ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்ற வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிராக தமிழகத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
இந்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து ஜிஎஸ்டி வரி விதிப்பு இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வரி விதிப்பைக் கண்டித்து தொடக்கத்தில் இருந்தே இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலைலயில், ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு எதிராக தமிழகத்தில் ஆகஸ்ட் 8ம் தேதி கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி தொடர்பான அனைத்துத் தரப்பின் கோரிக்கைகளையும் எடுத்துக் கூற அரசு சார்பில் குழு ஒன்று அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், அடுத்த மாதம் 8ம் தேதி ஜிஎஸ்டியை எதிர்த்து கடையடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தென்மண்டல வணிகர்களை ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார்.