கேரி பேக் விற்பனைக்கு அபராதம்... மறியல் செய்து கைதான கோவில்பட்டி வியாபாரிகள்
பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்தால் அபராதம் என்ற தூத்துக்குடி நகராட்சி உத்தரவை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி: கோவில்பட்டி பகுதியில் பிளாஸ்டிக் பை வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் அட்சயா உத்தரவுப்படி சுகாதார பிரிவு அதிகாரிகள் அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் உள்ளதா என்று சோதனை நடத்து வருகிறார்கள். இதில் கேரி பேக்குகள் கண்டறியப்பட்டால் அவைகளை பறிமுதல் செய்து ரூ.3 ஆயிரம் வரை அபதாரம் விதிக்கப்படுகிறது.
இது தொடர்ந்து நடந்து வந்ததால் அவர்கள் நகராட்சி அலுவலகம் திரண்டு வந்து மனு அளிக்க காத்திருந்தனர். ஆனால் கமிஷனர் தனது அறையில் இருந்தும் கோரிக்கை மனுவை வாங்க வியாபாரிகளை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த அதிகாரிகள் கமிஷனரின் அலுவலக அறையில் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீஸார் நகராட்சி அலுவலகத்திற்கு விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அது தோல்வியில் முடிந்ததால் அவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த தகவல் மற்ற வியாபாரிகளுக்கு தெரிய வந்ததால் அவர்கள் மாலையில் திடீரென அனைத்து கடைகளையும் அடைத்தனர். கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.