சென்னை: பலத்த மழையால் போக்குவரத்து நெரிசல்... ரயில் நிலையங்களில் தவித்துப் போன மக்கள்
சென்னையில் பலத்த மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை: சென்னையில் வெப்பசலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் கனத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பசலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் சென்னையில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து இன்று 3-ஆவது நாளாக மாலை நேரங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது.
கனமழை
சென்னையின் முகப்பேர், அண்ணா நகர் , அம்பத்தூர், தியாகராய நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, மயிலாப்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
காற்றுடன் கூடிய மழை
மேலும் மடிப்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தண்டையார்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
வீடு திரும்புவோர் பாதிப்பு
கனத்த மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மயிலாப்பூர், சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் மக்கள் வெளியேற முடியாமல் அங்கேயே தவித்தனர்.
வானிலை நிலவுகிறது
வெப்பசலனம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேலும் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் காலை நேரங்களில் மழையில்லாமல் மிதமான வானிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.