ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாலை மறியல் வாபஸ்.. 2 மணிநேரமாக ஸ்தம்பித்த போக்குவரத்து !
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாலை மறியலால் சென்ட்ரல் - பாரிமுனை இடையே கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்தவர்கள் திடீர் போராட்டத்தால் ஈடுபட்டதால் சென்னை சென்ட்ரல் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்திலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால் அந்த வழியாக போக்குவரத்து சீராகி வருகிறது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி பயிற்சி மருத்துவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் 2 மணிநேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பாரிமுனை -சென்ட்ரல் இடையே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் எக்மோர் வரையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து முத்துச்சாமி பாலம் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இதனால் ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும், மருத்துவமனைக்கு செல்பவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிடக் கோரி நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் 2 மணிநேரமாக ஸ்தம்பித்திருந்த போக்குவரத்து தற்போது சீராகி வருகிறது.