பஸ் ஸ்டிரைக் எதிரொலி.. சென்னையில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாததால் வாடகை கார் மற்றும் ஆட்டோக்களை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நாளை முதல் நடைபெறும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இருப்பினும், தமிழகத்தின் பல இடங்களில் முன் கூட்டி இன்றே ஸ்டிரைக் தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. பல பேருந்துகள் பனிமனையிலேயே நிறுத்தப்பட்டன. சென்னையில் உள்ள 36 பனிமனைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வில்லிவாக்கம், அயனாவரம், தி.நகர் உள்ளிட்ட பனிமனைகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கோயம்பேடு, கே.கே.நகர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் ஓடவில்லை.
பேருந்துகள் இயக்கப்படாததால் வாடகை கார், ஆட்டோவை மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மெரினா கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.