கழுத்தில் தொங்கும் கேமரா... இனி ஒரு போலீஸ் லஞ்சம் வாங்க முடியாது ஆமா!
சென்னை: ஏய் நிப்பாட்டு நிப்பாட்டு... வண்டிய ஓரம் கட்டு... எல்லாம் சரியா இருக்கா... அப்ப ஒரு எட்டு போட்டு காட்டு... என்று கூறி பொதுமக்களிடம் இருந்து போலீசார் இனி நூறு, இருநூறு பணத்தை கைப்பற்ற முடியாது. கழுத்தில் கேமராவை தொங்கவிடப் போகிறார்கள். இந்த கேமரா காவல்துறை கட்டுப்பாடு அறையுடன் இணைக்கப்பட்டிருப்பதால் யாரும் லஞ்சம் என்று ஒரு பைசா கை நீட்டி வாங்க முடியாது.
கழுத்தில் ஐடி கார்டு, செல்போன் தொங்க விடுவதைப் போல இனி டிராஃபிக் போலீசார் கழுத்தில் கேமரா தொங்கப் போகிறது. இதன் மூலம் குற்றவாளிகளை எளிதில் பிடிப்பது ஒருபுறம் இருக்க லஞ்சம், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் போலீசார் எளிதில் சிக்க வாய்ப்பு உள்ளது.
போக்குவரத்து போலீஸ்
இப்போதெல்லாம் போக்குவரத்துப்பிரிவு போலீசார் அதிக அளவில் பிரச்சினையில் சிக்குகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வபவர்களை தடுத்து நிறுத்தியதால் வேகமாக சென்று மோதி ஒருவர் உயிரிழந்தார். இதற்கு போக்குவரத்து போலீஸ் மீதுதான் தவறு என்று கூறப்பட்டது. சமீபத்தில் கேகே நகர் அருகே குடித்துவிட்டு பெண்ணிடம் தகராறு செய்த டிராஃபிக் போலீஸ் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஹெல்மெட் வசூல்
தற்போது தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் போடவேண்டும் என்று சட்டம் போடப்பட்டுள்ளதால் வகையாக வசூல் நடைபெறுவதாகவும், ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளிடம் டிராஃபிக் போலீசார் ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
கழுத்தில் கேமரா
இவ்வாறு வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக போலீஸ் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. எனவே குற்றங்களை தடுக்க, லஞ்சம் வாங்கும் போலீசாரை கண்காணிக்க, போலீசார் கழுத்தில் கண்காணிப்பு கேமராவை பொருத்தும் திட்டம் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் அமல்
போக்குவரத்துத் துறை போலீசார் கழுத்தில் கேமரா மாட்டும் ஐடியா ஹைதராபாத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது. கையில் ஒரு வாக்கி டாக்கி வைத்துக்கொண்டு ஓவர் ஓவர் என்று ஓயாமல் பேசுவது ஒருபுறம் இருக்க கழுத்தில் தொங்கும் கேமரா வேறு அனைவரையும் படம் பிடித்துக்கொண்டிருக்கிறது. இதேபோல தமிழ்நாட்டு போலீசார் கழுத்திலும் தொங்கவிடப் போகிறார்கள்.
குற்றங்களை தடுக்க
போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வாகனங்கள் மற்றும் தாறுமாறாக நிறுத்தப்படும் பேருந்துகளை கண்காணிக்கவும், குற்றங்களை தடுத்து, லஞ்சம் வாங்கும் போலீசாரை கண்டறிய, போலீசார் கழுத்தில் கேமரா பொருத்தும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டு அறையில்
இதன்படி, போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் போலீசாரின் கழுத்தில் தொங்கவிடப்படும் கேமராவில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பதிவாகும் வகையில், ஜி.பி.ஆர்.எஸ்., வசதி செய்யப்படும். இந்த கேமராக்கள் மூலம் போலீசார் மட்டுமல்லாமல், குற்றச் செயல்களில் ஈடுபவர்களையும் கண்காணிக்க முடியும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்போ ஆத்திர அவசரத்திற்கு போகணும்னா கேமராவை எங்கே வச்சுட்டு போவாங்க... நம்ம டவுட்டு நமக்கு!