சென்னையில் ஹெல்மெட் தகராறுக்காக இளைஞர் கையை போலீஸ் உடைத்தார்களா? நடந்தது என்ன? காவல்துறை விளக்கம்
சென்னை தியாகராய நகரில் தாய், சகோதரி கண்முன்னால் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவல்துறையினர் தாக்கும் வீடியோ வைரலாகிவருகிறது.
Recommended Video
சென்னை: தியாகராய நகரில் தாய், சகோதரி கண்முன்னால் இளைஞர் ஒருவரை போக்குவரத்து காவல்துறையினர் தாக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோகுறித்து போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் சுதாகர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அந்த வீடியோ காட்சியில் கம்பத்தில் ஒரு இளைஞரை சாய்த்து வைத்துக்கொண்டு ஒரு காவல்துறை அதிகாரி பிடித்துக்கொண்டிருக்க, இன்னொரு போலீஸ் அந்த இளைஞரின் கையை போட்டு முறுக்குகிறார். அந்த இளைஞரின் கையோ, போலீசின் சட்டையை பிடித்துக்கொண்டிருக்கிறது. விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் கையை போட்டு அடித்து விடுவித்துக்கொள்கிறார் இளைஞர். அப்போது அங்கிருந்த பெண்கள் அடிக்காதீங்க என்று கதறுகின்றனர். இந்த வீடியோ காட்சிதான் வைரலாகி வருகிறது.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ். இவர் தனியார் கார் கம்பெனியில் டிரைவராகப் பணியாற்றுகிறார். நேற்று தனது, அம்மா, சகோதரியுடன் நேற்று பைக்கில் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: சமூக வலைதளத்தில் வெளியானது, நடந்த சம்பவத்தில் ஒருபகுதி மட்டுமே. ஆனால், முழு வீடியோவைப் பார்த்தால் போக்குவரத்து காவல்துறையினர் மீது தவறு இல்லை என்பது தெரியவரும்.
தி.நகர், உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தின் அருகே சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுரேஷ், ஜெயராமன் ஆகியோர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6.30 மணியளவில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் வந்துள்ளனர்.
பைக்கை ஓட்டிய இளைஞர் ஹெல்மெட் அணியவில்லை. இதைப் பார்த்த போலீஸார், அந்த பைக்கை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது காவல்துறையினருக்கும் பைக்கில் வந்த இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அது தள்ளுமுள்ளாக மாறியது. சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷை முதலில் அந்த இளைஞர் தாக்கவே, அவரது இடது தோள்பட்டையில் இருந்த ஸ்டார் மற்றும் பட்டன்கள் அறுந்துள்ளன.
இதைப் பார்த்த இன்னொரு உதவி ஆய்வாளர் உடனடியாக அருகில் உள்ள மாம்பலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரித்தனர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். இதையடுத்து, சுரேஷ் கொடுத்த புகாரின்பேரில் மாம்பலம் போலீஸார், பிரகாஷை கைதுசெய்துள்ளனர்.