சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது.. டிராபிக் ராமசாமி ஹைகோர்ட்டில் முறையீடு!
சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
சென்னை: சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் பொன்.மாணிக்கவேலின் விசாரணை திருப்தியில்லை என தமிழக அரசு தெரிவித்தது.
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேலே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதி மகாதேவன் அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.