விஜய்காந்தை சந்தித்தார் டிராபிக் ராமசாமி- ஜெ.வை எதிர்த்து பொது வேட்பாளராக ஆதரவு கோரினார்
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பொது வேட்பாளராக போட்டியிட தேமுதிகவின் ஆதரவைக் கோரி அதன் தலைவர் விஜய்காந்தை சந்தித்துப் பேசினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
இந்தத் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் ராஜினாமா செய்ததையடுத்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் 3-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க. இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது.
அதே நேரத்தில் இந்தத் தொகுதியில் டிராபிக் ராமசாமி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அதிமுக தவிர்த்த பிற அரசியல் கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிராபிக் ராமசாமி, ஊழல் மிக்க ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிப்பதற்காகவே ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
இந் நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் டிராபிக் ராமசாமி சந்தித்து ஆதரவு கோரினார்.