தீவுத்திடலில் பட்டாசு கடை - ஜவுளி- இனிப்புக்கடை நடத்த எதிர்ப்பு: மனு டிஸ்மிஸ்!
சென்னை நகர பட்டாசு வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘'கடந்த 2 ஆண்டுகளாக சென்னைத் தீவுத் திடலில் தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்ய கடைகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த இடத்தில் கடைகள் அமைக்க சதுர அடிக்கு குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூலிக்கப்படுகிறது. இந்த வருடம் இந்த கட்டணத்தை அரசு அதிகரித்துள்ளது.
இதனால் டெண்டர் விடுவதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. எனவே, உயர்த்தப்பட்ட வாடகை கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வசூலித்த அதே கட்ட ணத்தை மட்டும் வசூலிக்க உத்தரவிட வேண்டும்''என்று கூறப்பட்டுள்ளது.
டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொது நல மனுவில், ''தீவுத்திடலில் இந்த ஆண்டு பட்டாசு கடைகளுடன் ஜவுளி, இனிப்பு கடைகளையும் அமைக்க முடிவு செய்துள்ளனர். இங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
இங்கு சிறிய விபத்து ஏற்பட்டாலும் பெரிய இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தீவுத்திடலில் ஜவுளி, இனிப்புகடைகளை திறக்க அனுமதிக்க கூடாது'' என்ரு கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.