கடைசியில் டிராபிக் ராமசாமி சொன்னதுதான் நடக்குது பாருங்க #jayalalithaa
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சொன்னபடிதான் நடக்கிறது. ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை தமிழக மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் காவிரிப் பிரச்சினையில் தமிழகம் அடுத்தடுத்து முதுகில் குத்தப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் ஜெயலலிதாவை விட்டால் தமிழகத்திற்கு வேறு நாதியில்லை என்ற உணர்வு மக்களிடம் வந்து விட்டது. அவரால் மட்டுமே இதை தீர்க்க முடியும் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
எனவேதான் அவரது உடல் நிலை குறித்து அறிய அத்தனைத் தரப்பும் ஆர்வமாக உள்ளது. ஆனால் சரியான தகவல் நேற்று வரை கிடைக்கவில்லை. நேற்றுதான் முதல்வரின் உடல் நிலை குறித்த சற்றே விரிவான விளக்கத்தை அளித்துள்ளது அப்பல்லோ. இதற்கு முக்கியக் காரணம்.. டிராபிக் ராமசாமி.
களம் குதித்த டிராபிக் ராமசாமி
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் அரசின் விதிமீறல்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவர். அஞ்சாமல் போராடக் கூடியவர். அப்படிப்பட்டவர் முதல்வரின் உடல் நிலை குறித்தும் ஒரு வழக்கு போட்டார் உயர்நீதிமன்றத்தில். அதில், முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வு பாதிப்பு உள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தொடக்கத்தில் அறிவித்தது.
என்ன பாதிப்பு
2 நாட்களுக்கு பிறகு, டாக்டர்கள் அளித்த பேட்டியில், முதல்வர் நலமாக உள்ளார், 2 நாட்களில் வீடு திரும்பி விடுவார், அவருக்கு ஓய்வு தேவை' என்றனர். ஆனால் திடீரென்று லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஜான் வந்து அப்போலோ மருத்துவமனையில் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். முதல்வருக்கு என்ன நோய் பாதிப்பு என்பதை இதுவரை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
வதந்திகள் பரவுகின்றன
இந்த நிலையில், முதல்வருடைய உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள மக்களும், அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த போலீசார் அனுமதிக்கின்றனர். மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்றாலும் தடுக்கிறார்கள். முதல்வரின் உடல்நிலை குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப், வார பத்திரிகைகளில் பல புரளிகள் கிளப்பப்பட்டு வருகிறது. பல இடங்களில் திடீர் திடீரென கடைகள் மூடப்படுகின்றன என குறிப்பிட்டிருந்தார்.
உடல் நிலை சரியாகும் வரை
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிட வேண்டும். முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் இது விளம்பரத்திற்காகப் போடப்பட்ட மனு என்றும் அது கூறி விட்டது.
அம்பலப்படுத்திய அப்பல்லோ
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ராமசாமியின் கோரிக்கை நியாயமானதே என்பதை வலியுறுத்தும் வகையில் அப்பல்லோவின் அறிக்கை வந்து சேர்ந்தது. அதில் கூறப்பட்டுள்ளதைப் பார்த்தால் ராமசாமி கோரிக்கை எந்த அளவுக்கு நியாயமானது என்பது புரியும்.
பணிகளைப் பார்க்க முடியாத நிலையில் முதல்வர்
அப்பல்லோ கூறியுள்ளபடி பார்த்தால் படிப்படியாகத்தான் முதல்வரின் உடல் நிலை தேறி வருகிறது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சப்போர்டிவ் தெரப்பியும் தரப்படுகிறது. இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் நிச்சயம் அவரால் கோப்பைப் பார்த்து கையழுத்துப் போட்டு இயல்பான பணிகளில் ஈடுபட வாய்ப்பே இல்லை என்பதை யாருமே எளிதாக சொல்லி விட முடியும். இதைத்தான் ராமசாமியும் வேறு வார்த்தைகளில் வலியுறுத்தியிருந்தார்.
நிச்சயம் உதவிக்கு ஆள் தேவை
இப்படிப்பட்ட நிலையில் நிச்சயம் முதல்வரின் பணிகள் இயல்பாக நடக்க அவருக்கு உதவிக்கு ஆள் தேவை. அதாவது துணை முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர். இதைத்தான் ராமசாமியும் வலியுறுத்தியிருந்தார்.
நிச்சயம் வதந்திகள் குறையாது
முதல்வர் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என அப்பல்லோ கூறியுள்ளது. எனவே முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் வரை அவர் குறித்த வதந்திகளை தடுப்பதும் சவாலாகவே இருக்கும். விஷமிகள் நிச்சயம் அதுபோன்ற செயல்களை தொடரவே செய்வார்கள். இதுவும் ராமசாமி கூறியதே.
அப்பல்லோ முன்பு கூட்டம்
மேலும் டிராபிக் ராமசாமி கூறியபடி அப்பல்லோ முன்பு தினசரி நூற்றுக்கணக்கில் கூடுகிறார்கள். சாலையிலேயே தேங்காய் உடைத்து சாமி கும்பிடுகிறார்கள். தொழுகையும் நடந்துள்ளது. இன்னும் பற்பல பூஜைகளும் நடைபெறுகின்றன. இதனால் அப்பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைப் பார்க்க வருவோர் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.
தற்காலிக முதல்வர் அல்லது துணை முதல்வர் நல்லது
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் டிராபிக் ராமசாமி தனது வழக்கைத் தொடர்ந்திருந்தார். அவர் கூறியபடி பார்த்தால், அப்பல்லோவின் லேட்டஸ்ட் அறிக்கையைப் பார்க்கும்போது நிச்சயம் முதல்வரை மேலும் தொந்தரவு செய்யாமல் அவரது வழக்கமான அரசுப் பணிகளைப் பார்க்க துணை முதல்வர் அல்லது தற்காலிக முதல்வர் அவசியம் தேவை என்பது மக்களின் கருத்தாகவும் உள்ளது.