ஆளுநரை சந்திக்க வேண்டும்.... டிராபிக் ராமசாமி மீண்டும் தற்கொலை மிரட்டல்!
ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்கித் தர கோரி டிராபிக் ராமசாமி சென்னை பாரிமுனையில் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்து வருகிறார்.
சென்னை: ஆளுநரை சந்திக்க இன்று மாலை 3 மணிக்குள் அனுமதி கிடைக்காவிட்டால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மிரட்டல் விடுத்து வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஊழலில் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அதிமுக ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி சென்னை பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார் டிராபிக் ராமசாமி.
4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவரை போலீஸார் வலுக்கட்டாயமாக கீழே இறக்கி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தானாக முன்வந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த 25-ஆம் தேதி பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
எனினும் அவரது கோரிக்கை நிறைவேற வில்லை. இந்நிலையில் பாரிமுனையில் உள்ள தனது அலுவலகத்தின் மாடியில் நின்று கொண்டு ஆளுநரை சந்திக்க நேரம் கிடைக்காவிட்டால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று டிராபிக் ராமசாமி மிரட்டல் விடுத்து வருகிறார்.
போலீஸார் சமாதானம் பேசியும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். பிற்பகல் 3 மணிக்குள் தன்னை சந்திக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றார். மேலும் தனது சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்று அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தையும் உடலில் ஒட்டிக் கொண்டுள்ளார். இதனால் பாரிமுனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.