தற்கொலை முயற்சி போராட்டம்.. டிராபிக் ராமசாமியை குண்டுக்கட்டாக தூக்கி, தரதரவென இழுத்து சென்ற போலீஸ்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சர்ச்சைக்குரிய அமைச்சர்களும் பதவி விலகாவிட்டால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக சமூக சேவகர் டிராபிக் ராமசாமி எச்சரித்த நிலையில் அவர் குண்டுக்கட்டாக அங்கிருந்து மீட்கப்பட்டார்.
பாரிமுனையிலுள்ள வங்கி கட்டிடம் ஒன்றின் 4வது மாடியில் ஏறி படுத்துக்கொண்டு டிராபிக் ராமசாமி, தற்கொலை முயற்சி போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபோன்ற ஒரு ஊழல் ஆட்சியுள்ள சமூகத்தில் வாழ்வதற்கு நான் சாவதே மேல் என அவர் அறிவித்துவிட்டார். இதனால் விஷயம் விபரீதமாகிவிடும் என்பதை உணர்ந்த போலீசாருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்தது. உடனே டிராபிக் ராமசாமியை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவு பறந்து வந்தது.
உடனடியாக டிராபிக் ராமசாமியை நெருங்கிய போலீசார், அவரை குண்டுக்கட்டாக கீழே இறக்கினர். இதனால் கோபமடைந்த டிராபிக் ராமசாமி, போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டார். அங்கிருந்து நகரமாட்டேன் என கோபத்தில் வாக்குவாதம் செய்தார்.
ஆனால் அவரை தரதரவென இழுத்துச்சென்ற போலீசார், முதலில் அருந்துவதற்கு பானம் கொடுத்தனர். அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து மருத்துவர்களை அழைத்து முதல் உதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.