சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மருத்துவமனையில் அனுமதி!
பொது நல வழக்குகளைத் தொடர்ந்து வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொது நல வழக்குத் தொடர்ந்து வரும் டிராபிக் ராமசாமிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை சேர்ந்தவர் டிராபிக் ராமசாமி. 82 வயதான இவர் பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக சென்னை உயர்நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் பொது நல வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்றவர். தோல்வியும் அடைந்திருக்கிறார். மறைந்த ஜெயலலிதாவை எதிர்த்து பல வழக்குகளை தொடர்ந்து அதிமுகவினரின் கோபத்தை சம்பாதிக் கொண்டவர் டிராபிக் ராமசாமி. அண்மையில் கூட ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்களை எழுப்பி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
டிராபிக் ராமசாமி ஏற்கனவே உடல் நலக் குறைவு இருந்த போதிலும், சளைக்காமல் பொது நல வழக்குகளை தொடர்ந்து வந்த நிலையில், இன்று சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் கடைசியாக தாக்கல் செய்த ஜெயலலிதாவின் இறப்பு குறித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கூட அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.