தமிழக அரசை முடக்க வேண்டும்.. ஹைகோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரை தகுதி இழப்பு செய்யக் கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தமிழக அரசை முடக்கி வைக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் முதல்வர் பெயர் இடம்பெற்றுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் மீது ஊழல் மற்றும் வருமான வரித்துறை வழக்குகள் உள்ளது.
ஆனாலும் முதல்வர், அமைச்சர்கள் பதவி விலகவில்லை. ஆளுநரும் சட்டசபையைக் கலைக்கவில்லை. எனவே இந்த அரசை முடக்கி வைக்க வேண்டும். முதல்வர், விஜயபாஸ்கர், காமராஜ் ஆகிய அமைச்சர்கள் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.