திருச்சியில் ஜெயலலிதாவை வாழ்த்திய பேனர்களை கிழித்து டிராபிக் ராமசாமி திடீர் போராட்டம்
திருச்சியில்: திருச்சியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி டிராபிக் ராமசாமி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டது.
திருச்சி மாநகர் பகுதியில் அதிமுக சார்பில் பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்த. 6-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தும் பல இடங்களில் அதிமுக சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
{
மேலும் ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலைய சாலை மற்றும் கோவில் ராஜகோபுரம் செல்லும் வழி ஆகிய இடங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை ஸ்ரீரங்கத்திற்கு சென்றிருந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி திடீரென பேனர்களை கிழிக்க ஆரம்பித்தார். மேலும் பேனர்களை அகற்றக்கோரி போராட்டத்திலும் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் அங்குசாமி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீஸார், டிராபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் டிராபிக் ராமசாமியோ, மாநகராட்சி ஊழியர்களை உடனே வரவழைத்து டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனால் அங்கு மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்தபேனர்கள் அகற்றப்பட்டன. இதனிடையே அங்கு வந்த அதிமுகவினர் அனுமதி பெற்று வைத்த பேனர்கள் ஏன் அகற்றப்பட்டன என கேள்வி எழுப்பினர். இதனால் டிராபிக் ராமசாமி மற்றும் அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதால், அதிமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.