திருப்பூரில் போராட்டத்தில் மயங்கி விழுந்தார் டிராபிக் ராமசாமி!
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, திருப்பூரில் போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும்போதே உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
திருப்பூர்: சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திருப்பூரில் நடந்த போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு சமூக நல போராட்டங்களை நடத்தி அதிமுக, திமுக அரசுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருபவர் டிராபிக் ராமசாமி. அவர் இன்று திருப்பூரில் போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் போரட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசியநிலையில், மயங்கி விழுந்தார். இதனால் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த டிராபிக் ராமசாமியை, அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் கொண்டு சென்றனர். அரசு மருத்துவமனையில் டிராபிக் ராமசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக நேற்று, திருப்பூரில் ஆட்சியர் அலுவலகம் முன்பு டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தினார். அப்போது, ஆட்சியர் அலுவலகம் முன்பாக, நடைபாதையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வரவேற்பு பதாகைகள் போராட்டம் காரணமாக அகற்றப்பட்டன.
இந்த நிலையில் இன்று மீண்டும் திருப்பூர் அரசு அலுவலகங்களுக்கு அருகிலும் எதிரிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து இன்று தனது ஆதரவாளர்களுடன் திடீர் போராட்டம் நடத்தினார் டிராபிக் ராமசாமி.
அப்போது அவர் அரசுக்கு எதிராகவும், பேனர்களை வைத்து பொதுமக்களுக்கு இடையூரு செய்யும் அரசியல் பிரமுகர்கள் குறித்தும் கோஷங்களை எழுப்பினார்; கண்டனம் தெரிவித்தும் பேசினார். பேச்சின் நடுவே மயங்கி விழுந்தார் டிராபிக் ராமசாமி. இது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.