24 மணி நேரத்தில் ஆட்சியை கலைக்கணும் - டிராபிக் ராமசாமி திடீர் சாகும் வரை உண்ணாவிரதம்
எடப்பாடி பழனிச்சாமி அரசை கலைக்கக் கோரி டிராபிக் ராமசாமி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசை 24 மணி நேரத்தில் கலைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள அலுவலகத்தில் காலை 9 மணி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனது திடீர் போராட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, தமிழகத்தில் மெஜாரிட்டி இல்லாத மைனாரிட்டி அரசு நடப்பதாக குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி தாமாகவே முன் வந்து பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அதை செய்ய வில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமாக குதிரை பேரம் நடக்கிறது. இந்த ஆட்சி உடனே அகற்றப்பட வேண்டும்.
இன்னும் 24 மணி நேரத்தில் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமை செயலகம் அல்லது ஆளுநர் மாளிகை முன்பு எனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன் என்று கூறினார்.
டிராபிக் ராமசாமி எந்த இடையூறும் இல்லாமல் தனது அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தாலும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.