தமிழகத்தில் கொள்ளை ஆட்சி ஒழிய வேண்டும் - டிராபிக் ராமசாமி ஆவேசம்
சென்னை: தமிழகத்தில் கொள்ளை ஆட்சி ஒழிய வேண்டும் என தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆவேசமாக கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பாரிமுனையில் உள்ள தனது அலுவலகம் உள்ள கட்டடத்தின் 4வது மாடியில் ஏறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் கொள்ளை ஆட்சி ஒழிய வேண்டும். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் கதிராமங்கலம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க வேண்டும். கதிராமங்கலத்தில் பெண்களை போலீசார் மிரட்டியுள்ளனர். தஞ்சாவூர் எஸ்.பி.மகேஷ்குமார் மீது் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கூறினார்.
அரசு, நீதிமன்றம் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை போய்விட்டது எனக் கூறிய அவர், நம்பிக்கை இல்லாததால் சாவதே மேல் என முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் டிராபிக் ராமசாமி உருக்கமாக கூறினார்.