பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களுக்கான முன்பதிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் என ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் பொங்கல் விடுமுறை என்பதால் வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்போர், படிப்போர் என லட்சக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
கொள்ளை லாபம்
அந்த சமயங்களில் பண்டிகையை முன்னிட்டு, ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். இதுபோன்ற நேரங்களில் தனியார் பேருந்துகள் டிக்கெட்களின் விலையை உயர்த்தி கொள்ளை லாபம் அடிப்பர்.
ரயிலை விரும்பும் மக்கள்
அதுவும் இல்லாமல் தற்போது அரசுப்பேருந்துகளின் கட்டணங்கள் மிரண்டு ஓடக்கூடிய அளவுக்கு உயர்ந்துள்ளது. அதனால் பெரும்பாலான மக்கள், ரயிலையே பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதுவும் இல்லாமல் ரயில் பயணம் களைப்பின்றி செல்லக்கூடிய பிரயாணமாகவும் இருப்பதால் இதற்கே பொதுமக்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர்.
விற்று தீர்ந்தன
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடிவெடுத்தது.அதன்படி, ஜனவரி 11-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே எல்லா டிக்கெட்களும் நிறைவடைந்தன. இதனால் காத்திருந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
பயணிகள் கோரிக்கை
ஜனவரி 12-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளையும், ஜனவரி 13-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாளும், 14-ம் தேதிக்கு ஞாயிற்றுக்கிழமையும் தொடங்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. போகிற போக்கை முன்பதிவுக்கான தினங்களிலும்கூட டிக்கெட்கள் அனைத்தும் விற்றுமுடிய நேரிடும் என்பதால், கூடுதலாக போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.