பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் ரிசர்வேசன்... அத்தனையும் ஃபுல் - சிறப்பு ரயில்கள் விட கோரிக்கை
பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
சென்னை: தமிழகத்தில் 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிவடைந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
2018 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வோர் செப்டம்பர் 15ஆம் தேதி காலையில் முன்பதிவு செய்தனர்.
ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் செப்டம்பர் 16ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
சொந்த ஊர் பயணம்
சென்னையில் வசித்து வரும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இதனையொட்டி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
ஞாயிறன்று பொங்கல் பண்டிகை
இந்தாண்டு பொங்கல் ஞாயிற்றுக் கிழமையில் வருவதால் இரண்டு நாட்கள் முன்னதாக அதாவது வெள்ளிக்கிழமை மாலையே பெரும்பாலானவர்கள் வெளியூர்களுக்கு செல்வார்கள் என்பதால், செப்டம்பர் 15ஆம் தேதியே டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
போகிக்கு போக டிக்கெட்
ஒரு சிலர் சனிக்கிழமையன்று பயண நேரத்தை திட்டமிட்டதால் ஜனவரி 12ஆம் தேதி பயணத்திற்கான டிக்கெட்டுக்கள் பலருக்கு கிடைத்தது. இதனால் பலரும் மகிழ்ச்சியடைந்தனர். சிலருக்கு ஏமாற்றமே கிடைத்தது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரிசர்வேசன் முடிவடைந்தது.
இணையதள முன்பதிவு
பெரும்பாலான மக்கள் இணையதளம் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் டிக்கெட் முன்பதிவு மையங்களில் அதிகளவில் கூட்டம் இல்லாமல் இருந்தது.
ஜனவரி 13 பயண டிக்கெட்
ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய செப்டம்பர் 16ஆம் தேதியன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது. நெல்லை, பாண்டியன், கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்தது.
காத்திருப்போர் பட்டியல்
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதிகை, அனந்தபுரி, திருச்செந்தூர், மன்னை விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு முடித்து விட்டது. காத்திருப்போர் பட்டியல் 200 பேர் வரை அதிகரித்துள்ளது. சிறப்பு ரயில் பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பயணிகள் தெரிவித்தனர்.
70 சதவிகிதம் பேர்
பெரும்பாலான மக்களிடம் இணையதளம் வசதி உள்ளது. இதனால், அவர்கள் எளிமையாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்கின்றனர். தற்போது, 70 சதவீதம் பேர் இணையதளம் வழியாக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தீபாவளிக்கும் எல்லாம் ஃபுல்
இதேபோல தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் பலர் சிறப்பு ரயில் அறிவிப்புக்காக காத்துக்கொண்டுள்ளனர். இது பற்றி கருத்து கூறிய ரயில்வே அதிகாரிகள் தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றி கவனம் செலுத்தி வருகிறோம். அடுத்த சில வாரங்களில் சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்பும் வெளியாகும். பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது பற்றி டிசம்பரில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
அதிக கட்டண ரயில்கள் அவஸ்தை
தற்போது அதிக கட்டணம் கொண்ட சுவீதா ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. அதேபோல இல்லாமல் சாதாரண பயண கட்டணம் கொண்ட சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கையாகும்.