முக்கோண காதலால் விபரீதம்... தோழியை கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை!
கடலூரில் முக்கோண காதலால் தோழியைக் கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் : முக்கோண காதல் விபரீதத்தால் தோழியைக் கொன்றுவிட்டு 19 வயது இளம்பெண் போலீசார் கண்முன்னே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் புலியூர் காட்டுசாகை கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது திவ்யா. கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த 19 வயது ஜெயசித்ரா இருவரும் தோழிகள். திவ்யா சாத்தமாம்பட்டு கிராமத்தில் தன் சித்தி வீட்டில் தங்கி நர்சிங் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இருவரும் இணை பிரியாத தோழிகளாக சுற்றி வந்துள்ளனர்.
ஆனால் திடீரென கடந்த மே 8ம் தேதி முதல் திவ்யாவை காணவில்லை, இதனையடுத்து பெற்றோர் காடாம்புலியூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதில் திவ்யாவின் தோழி சித்ராவிடம் நடத்திய விசாரணையின் போது திவ்யாவை கொன்று சித்ரா புதைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
காதலனை காதலித்த தோழி
ஆனத்தூரைச் சேர்நத் விஜயராஜ் என்பவரை திவ்யாவிற்கு ஜெயசித்ரா அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து விஜயராஜும் திவ்யாவும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயசித்ரா பலமுறை திவ்யாவை எச்சரித்துள்ளதாக தெரிகிறது.
மதுவில் விஷம் கொடுத்து கொலை
எனினும் இருவரின் காதல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த ஜெயசித்ரா திவ்யாவிற்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி அழைத்து சென்றுள்ளார். பண்ருட்டி அருகேயுள்ள திருவாமூருக்கு அழைத்து சென்ற ஜெயசித்ரா கெடிலம் ஆற்றங்கரையில் திவ்யாவிற்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளார்.
ஆற்றில் புதைத்து மறைப்பு
இதனையடுத்து மயங்கி விழுந்த திவ்யாவை நண்பர் மோகனுடன் சேர்ந்து ஆற்றில் குழி தோண்டி புதைத்துள்ளார். திவ்யாவை காணவில்லை என்ற புகாரில் ஜெயசித்ராவின் மீது சந்தேகப் பார்வை போனதையடுத்து இந்த உண்மைகள் தெரிய வந்துள்ளன. இதனையடுத்து ஜெசித்ராவை போலீசார் கைது செய்து நேற்று ஆற்றங்கரையில் திவ்யாவை புதைத்த இடத்தை அடையாளம் கண்டு பிரேதத்தை தோண்டி எடுத்தனர்.
கிணற்றில் குதித்து தற்கொலை
இந்நிலையில் சித்ரா போலீசாரின் பிடியில் இருந்து விலகி ஓட்டம் பிடித்துள்ளார். அவரை போலீசார் துரத்தி சென்ற நிலையில் அருகில் இருந்த 150 அடி ஆழ கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் காயமடைந்த ஜெயசித்ரா உயிரிழந்துள்ளார். முக்கோண காதல் கதை இளம்பெண்கள் இருவரின் வாழ்க்கையையே முடித்துவிட்டது, அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.