அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம்.. சென்னையில் தொடங்கப்பட்டது!
தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் இன்று துவங்கப்பட்டு உள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் இன்று துவங்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் வருடாவருடம் போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதையடுத்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தியாராயா கல்லூரி வளாகத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் அரசு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தை துவங்கி வைக்க உள்ளார்.
3 மாதத்திற்கு 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுக்கு 2000 மாணவர்கள் வீதம் பயிற்று விக்கப்படுவார்கள். இது முழுக்க முழுக்க இலவசமாக செயல்படும்.
தமிழ்நாட்டின் முதல் அரசு இலவச போட்டித்தேர்வு பயிற்சி மையம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் கலந்துக்கொள்ள இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்..
அதுமட்டுமின்றி தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் மட்டுமே இந்த பயிற்சி மையத்தில் அனுமதிக்கப்படுவர். ஆண்டுக்கு சுமார் 1.53 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பயிற்சி மையத்தின் நோக்கம் தமிழ்நாட்டில் உள்ள சமூக ரீதியாக நலிவுற்ற படித்த மாணவ மாணவியர்கள் மத்திய மற்றும் மாநில அரசு பணிக்கென நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளை திறம்பட எதிர்நோக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெரும் ஒவ்வொரு மாணவர்களுக்கு 1000 ரூபாய் மதிப்பிலான பயிற்சி கையேடு இலவசமாக வழங்கப்படும்.மேலும் பயிற்சி நேரம் தினமும் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 2 மணி முதல் 5 மணி வரை நடைப்பெறும். அதேபோல் இந்த பயிற்சி மையத்தில் பயில வயது வரம்பு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.