பாடாய்படுத்தும் செல்ஃபி மோகம்... மீட்புக்கு வந்த ஹெலிகாப்டர் முன் கிளிக்கிய ஆசிரியர்கள்!
ஸ்மார்ட் போன் புரட்சி வந்தாலும் வந்தது, குட்டீஸ் முதல் வயதானவர்கள் வரை செல்ஃபி மோகம் இவர்களை பாடாய்படுத்துகிறது. குரங்கணியில் நடந்த இந்தக் கொடுமைய பாருங்க.
Recommended Video
சென்னை : ஸ்மார்ட் போன் புரட்சி வந்தாலும் வந்தது புதுப்புது செயலிகள், அதிலும் குறிப்பாக இந்த செல்ஃபி மோகம் இருக்கே அனைவரையும் பாடாய்படுத்துகிறது. குரங்கணியில் மீட்புப் பணிக்காக வந்த ஹெலிகாப்டர் முன் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.
புகைப்படங்கள் நம்முடைய நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டும் ஒரு உன்னதமான விஷயம். கேமராக்களின் புழக்கம் அதிகம் இல்லாத காலத்தில் புகைப்படங்களுக்கு இருந்த மதிப்பே தனி தான். கருப்பு, வெள்ளை புகைப்படங்களை இப்போது பார்த்தால் அதில் இருக்கும் உயிரோட்டம் இன்றைய கால புகைப்படங்களில் குறைவு தான்.
புகைப்படங்கள் மீதான மதிப்பை குறைத்து போட்டது என்றால் அதற்கு செல்போனுடன் இணைப்பாக வந்த காமிராவால் தான். 1 மெகா பிக்சல் கேமராக்களாக செல்போனில் அறிமுகம் செய்யப்பட்ட கேமராக்கள், இன்றைய ஸ்மார்ட் போன் புரட்சியில் 15 மெகாபிக்சல் வரை என அட்வான்ஸ்கிவிட்டது.
எங்கும் செல்ஃபி மேனியா
தனியாக கேமராவெல்லாம் வேண்டாம் செல்போன் இருந்தாலே போதும் என்ற நிலையை இது உருவாக்கிவிட்டது. வளர்ச்சி என்பது எப்போதுமே சில ஆபத்துகளையும் உள்ளடக்கி இருக்கும் என்பதற்கு செல்போன் கேமராக்களும் விதிவிலக்கல்ல. செல்ஃபி என்ற விஷயம் அறிமுகமான, கீழே விழுந்தாலும் செல்ஃபி, தூங்கி எழுந்ததும் செல்ஃபி என்று செல்ஃபி பைத்தியங்களாகவே திரிகின்றனர்.
ஸ்டேடஸ்க்காக செய்யும் இளசுகள்
ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதில் சிக்கி இருப்பவரை மீட்காமல் முதலில் அந்த இடத்தில் இருந்து ஒரு செல்ஃபி எடுத்து அதை முகநூல் அல்லது டுவிட்டரில் பதிவிட்டு லைக்ஸ் வாங்கிவிடுவதில் தான் இன்றைய தலைமுறையின் ஸ்டேடஸே இருக்கிறது. சமூக வலைதளங்களில் நிரம்பி வழியும் செல்ஃபிகள் எண்ணிலடங்காதவை.
ஹெலிகாப்டர் முன் ஆசிரியர்கள் செல்ஃபி
இப்படித் தான் குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வந்திருந்தன. இதனை பார்க்க வந்த பயிற்சி ஆசிரியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா. போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய செல்போனில் தோழிகளுடன் செல்ஃபியை எடுத்து கிளிக்கித் தள்ளியுள்ளனர்.
சிந்தித்து செயல்படுங்கள்
என்ன தான் செல்ஃபி மோகமாக இருந்தாலும் எந்த காரியத்திற்காக ஹெலிகாப்டர் வந்துள்ளது என்ற குறைந்தபட்ச சிந்திக்கும் திறன் கூட இல்லாதவர்களாக மாறி வருகின்றரே இந்த தலைமுறையினர். வரலாற்று சம்பவங்களை பதிவு செய்ய கேமராக்களை திறந்து புகைப்படங்களை கிளிக்கித் தள்ளுவதை விட்டு விட்டு அறிவைத் திறந்து யோசிக்கப் பழகுங்கள்.