தூத்துக்குடியிலிருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து.. மைசூர் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து தூத்துக்குடி நகரமே போர்க்களமாக மாறியது. திருச்செந்தூர், நெல்லை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும், பை-பாஸ் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
தூத்துக்குடி நகருக்குள் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் மறியல் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றபோதிலும் கூட, தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்கள் தாமதமாகின.
தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு, 6 மணியளவில்தான் தூத்துக்குடியில் இருந்து கிளம்பியது. மேலும் சில ரயில்கள் வரத்து மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் தாமதமாக கிளம்பின.
ரயில் தண்டவாளத்தில் யாரேனும் நாச வேலைகளில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தால், போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் ரயில்கள் தாமதமாக புறப்பட்டுள்ளன.
வேகம் குறைந்து இயக்கப்பட்ட ரயில்கள் தூத்துக்குடியிலிருந்து சற்று தொலைவுக்கு பிறகே வேகமாக இயக்கப்பட ஆரம்பித்துள்ளன.