தமிழகத்திற்கு புதிய ரயில்கள் - தாம்பரத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு ரயில்கள் இயக்கம்
நவம்பர்1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள தென் மண்டல ரயில்வே கால அட்டவணைப்படி தமிழகத்திற்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை: சென்னையின் புதிய முனையமாக செயல்பட தொடங்கியுள்ள தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை, நெல்லை, குஜராத்துக்கு புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு புதிதாக ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என்றும் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாம்.
தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, கொங்கன் ரயில்வேக்கான தென்மண்டல ரயில்வே கால அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. புதிய அட்டவணையில் உள்ள மாற்றங்கள் நவம்பர்1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
தெற்கு ரயில்வே தலைமை ஆபரேஷன் மேலாளர் அலுவலக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளபடி புதிய அட்டவணையில் தமிழகத்திற்கான புதிய ரயில்களும் இடம் பெற்றுள்ளதாம்.
அதன்படி சென்னையில் புதிய முனையமான தாம்பரத்தில் இருந்து பகத்-கி-கோத்தி(ராஜஸ்தான்)க்கு ஹம்சபர் வாராந்திர எக்ஸ்பிரஸ், திருநெல்வேலிக்கும், செங்கோட்டைக்கும் தனித்தனியே தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த 2 ரயில்களும் விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி வழியாக இயக்கப்படுமாம். இதேபோல் திருநெல்வேலியில் இருந்து குஜராத் மாநிலம் காந்திதாமுக்கு வாராந்திர ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சென்னை சென்ட்ரல் - பழனி எக்ஸ்பிரஸ் பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரையிலும், சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கொல்லம் வரையிலும் நவ.1ம் தேதி முதல் நீட்டிக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு புதிதாக ஏசி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என்றும் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாம். இந்த புதிய ரயில் நவம்பர் 3ஆம் தேதி முதல் இயக்கப்படுமாம். ஏற்கனவே சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்தான் இப்படி ஏசி ரயிலாக மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளாவுக்கு இயக்கப்படும் 51 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரி - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் 75 நிமிடங்கள் வரை வேகம் அதிகரிக்கப்படுகிறது. அதற்கு அடுத்து சென்னை எழும்பூர் - மங்களூர் எக்ஸ்பிரஸ் 60 நிமிடங்கள் மிச்சமாகும் வரை வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை எழும்பூரில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், காரைக்குடி, சேலம், மன்னார்குடி, நெல்லை, முத்துநகர் உட்பட பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளன. இப்படி வேகம் அதிகரிப்பதால் ரயில்கள் புறப்படும் மற்றும் போய்ச்சேரும் நேரமும் நவம்பர்1ஆம் தேதி முதல் மாற்றப்படும்.
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று வரும் ராமேஸ்வரம் - புவனேஸ்வரம் , லோக்மான்ய திலக் - மதுரை, திருச்சி - அவுரா, புதுடெல்லி - புதுச்சேரி உட்பட 21 ரயில்களின் வேகம் அதிகமாகும். சென்னை சென்ட்ரல் , எழும்பூர் வந்துச் செல்லும் சில ரயில்களில் வருகை, புறப்பாடு நேரமும் நவம்பர் 1ஆம் தேதி முதல் நேரமும் மாற்றப்பட உள்ளது.