தென் மாவட்ட ரயில்களில் விழுப்புரம் வரை பாதுகாப்புக்காக செல்லும் சென்னை ரயில்வே போலீஸ்
சென்னை: எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் ரயில்வே போலீசார் விழுப்புரம் வரை பாதுகாப்புக்காக இன்று முதல் செல்கின்றனர்.
கடந்த 1ம் தேதி சென்னை சென்டரலில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸில் 2 குண்டுகள் வெடித்ததை அடுத்து ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ரயில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகிறது. இதுவரை எழும்பூர் ரயில்வே போலீசார் இரவு நேரத்தில் செங்கல்பட்டு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு அவர்கள் விழுப்புரம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரயில்களில் பாதுகாப்பு செல்லும் போலீசார் முறையாக செயல்படுகிறார்களா, ஒழுங்காக சோதனை நடத்துகிறார்களா என்பது உள்ளிட்டவைகளை கண்காணிக்க 6 பேர் கொண்ட தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே போலீசார் பயணிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை ஆய்வு செய்ய இன்று முதல் விழுப்புரம் வரை ரயிலில் செல்கின்றனர்.