கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.. விஜயகாந்த் ஆவேசம்!
சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பாக நாள்தோறும் வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடக்கும் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, சென்னை ஹைகோர்ட்டில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
கோர்ட் உத்தரவுப்படி சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். சிலை கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஐஜி பொன்மாணிக்கவேல் ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தார்.
திருப்தியில்லை
இந்நிலையில், ஹைகோர்ட்டில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில், சிலை கடத்தல் தொடர்பான அறிக்கைகளை ஒராண்டாக ஐஜி பொன்.மாணிக்கவேல் தமிழக அரசிடம் தெரிவிப்பது இல்லை. அவர் விசாரிப்பதில் திருப்தியில்லை.
அரசுக்கு எதிர்ப்பு
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்த் கண்டனம்
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.
சந்தேகத்தை எழுப்புகிறது
சிலை திருட்டு வழக்கை திடீரென சிபிஐக்கு மாற்றுவது சந்தேகத்தை எழுப்புகிறது. சிலைக்கடத்தல் வழக்கில் நேர்மையான அதிகாரிகள் பணியில் தொடர வேண்டும்.
இரும்புக்கரம் கொண்டு
சாமி சிலைகள் மற்றும் கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். இவ்வாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.