கிருஷ்ணகிரி: ரயிலில் இருந்து வாலிபரை தள்ளிவிட்ட திருநங்கை தற்கொலைக்கு முயற்சி
இளைஞரை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட திருநங்கை தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே ஓடும் ரயிலில் இருந்து இளைஞரை தள்ளிவிட்ட திருநங்கை, போலீஸ் விசாரணைக்கு பயந்து அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் தாலுகா கின்னப்பள்ளி தாட்டிவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யநாராயணா. இவரது உறவினர்களான வீரபாபு, பாப்பண்ணா துரா, சாமிதுரா ஆகியோருடன் சத்யநாராயணா ராஜமுந்திரியில் இருந்து, திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்ல பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தார்.
ரயில் கிருஷ்ணகிரி அருகே சாமல்பட்டி அருகே ஓடிக்கொண்டிருந்தபோது, அங்கு காசு கேட்டு வந்த திருநங்கைகளுடன் வாக்குவாதம் நடந்ததில், ஆத்திரமடைந்த ஒரு திருநங்கை, படியில் அமர்ந்து இருந்த சத்யநாராயணாவை காலால் எட்டி உதைத்தார். இதில் நிலைகுலைந்த சத்யநாராயணா, வேகமாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவரைக் காப்பாற்ற அவரது உறவினர் வீரபாபும் ரயில் இருந்து குதித்து உள்ளார். அவருக்கும் படுகாயம் ஏற்பட்டு. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்து திருநங்கை ஸ்வேதா என்பவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.