ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிரைவிட்ட திருநங்கை - சொந்தங்களின் புறக்கணிப்பால் பரிதாபம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் ரயிலில் இருந்து வெளியே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மனதை உருக்குவதாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தெற்கு சேனையார் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் மாரிச்செல்வம் (எ) செல்வராஜ். பாலியல் குறைபாடு கொண்ட இவர் சொந்தங்களே இவரைப் புறக்கணித்த காரணத்தினால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறி தனது பெயரை ஷாலினி என்றும் மாற்றிக் கொண்டார்.
ஷாலினியுடன் பெங்களூரில் ஒன்றாக வசித்து வந்த திருநங்கைகளான பத்மாவதி, சிந்தாமணி ஆகியோர் எட்டயபுரம் செல்ல விரும்பியுள்ளனர். ஆனால், சொந்த ஊருக்குச் செல்ல ஷாலினி விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இரவு, பெங்களூரில் இருந்து திருநெல்வேலி செல்வதற்காக பத்மாவதி, சிந்தாமணியுடன் ஷாலினி ரயிலில் வந்தார். அவர்கள் வந்த ரயில், நள்ளிரவு சேலம் மாவட்டம், வீரபாண்டி அருகே வரும்போது கழிப்பறைக்கு செல்வதாகக் கூறிச் சென்ற ஷாலினி திடீரென ரயில் பெட்டியின் கதவைத் திறந்து கொண்டு கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து ஷாலினியின் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஈரோடு ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.