நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கை... நிர்வாணப்படுத்தி போலீசார் சோதனையிட்டதாக சர்ச்சை!
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கை கிரேஷ் பானுவை புழல் சிறையில் பெண் காவல் அதிகாரி நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை : நீட் தேர்வுக்கு எதிராக போராடிய போது கைது செய்து அழைத்து சென்ற போலீசார் சிறையில் நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததாக திருநங்கைகள் செயற்பாட்டாளர் கிரேஸ் பானு குற்றம்சாட்டியுள்ளார்.
அனிதாவின் மரணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ அமைப்புகளைத் தாண்டி சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் கூட நீட் தேர்வு கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக கடந்த 7ம் தேதி சென்னை கிண்டியிலுள்ள அறிவுசார் சொத்துடைமை மைய அலுவலக வாயிலில் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட 2 திருநங்கைகள் உள்பட 10 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் தங்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக திருநங்கை கிரேஸ் பானு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
|
அலைக்கழிப்பு
சிறையில் நிர்வாணப்படுத்தப்பட்டது குறித்து தமிழ்ஒன் இந்தியாவிடம் கிரேஸ் பானு கூறியுள்ளதாவது : நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் நானும் மற்றொரு திருநங்கையும் பங்கேற்றோம். போராட்டத்தின் முடிவில் எங்களை போலீசார் கைது செய்தனர். ஒரு மணி நேரத்தில் விடுவிப்பதாகக் கூறிவிட்டு சென்னை முழுவதும் போலீஸ் வாகனத்தில் அலைக்கழித்தனர்.
இரவில் ஆஜர்
இறுதியில் இரவு 11 மணியளவில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மொத்தம் நாங்கள் 12 பேர், 10 பேர் இளைஞர்கள் என்பதால் புழல் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நாங்கள் பெண் திருநங்கைகள் என்பதால் பெண்கள் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
|
நிர்வாண சோதனை
புழல் சிறையில் பெண் காவல் அதிகாரி மற்றும் நர்ஸ் இருவரும் எங்களை நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தினர். இது முற்றிலும் தவறான விஷயம் நான் திருநங்கை தானா என்று பரிசோதிப்பதற்கு என்னை நிர்வாணப்படுத்துவது எந்த வகையில் நியாயம்.
|
அரசு ஆவணம் போதாதா
நான் பெண்ணாக மாறியதற்காக செய்த அறுவை சிகிச்சை ஆவணங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் அரசு பதிவேட்டில் என்னுடைய பெயர் அனைத்தையும் மாற்றியுள்ளேன்.
புகார்
இதையெல்லாம் அடையாளமாக கேட்டு போலீசார் சரிபார்த்திருக்கலாம், ஆனால் என்னை நிர்வாணப்படுத்தியதோடு அறுவறுக்கத்தக்க வார்த்தைகளிலும் பேசினார். பெண் காவலாளியின் இந்த நடவடிக்கை குறித்து தமிழக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன் என்று சிறையில் இருந்து வெளிவந்துள்ள கிரேஸ் பானு தெரிவித்துள்ளார்.